Sunday, May 3, 2015

உத்தம வில்லன் - உன்னத சினிமாவா?

தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறேன் இது பத்தாண்டுகளுக்கு பிந்தைய சினிமாவை சமகாலத்தில் வெளியிட்ட கடவுள் என மெச்சும் பதிவெல்லாம் கிடையாது.. கமலைப்பற்றிய அந்த மெச்சல்களெல்லாம் குணா,மகாநதியோடு வழக்கொழிந்து போய்விட்டது என்பது நிதர்சனம். அப்படி அவரை மெச்சித்தான் ஆகவேண்டும் எனச்சொல்ல கமல் என் மனதுக்கு நெருக்கமானவரும் கிடையாது.

சினிமா… மனம் விட்டு விரும்ப, கிறுக்கு பிடிக்க,ரசிக்க,சிலாகிக்க வைக்கிற எனக்குப்பிடித்த ஒரு மீடியா. இதில் தொன்று தொட்டு ஆதிக்கம் செலுத்திவரும் கமலஹாசன் என்ற மனிதர் மீது தேவர்மகன் தொட்டு,  எனக்கு தனிப்பட்ட விமர்சனங்களும், வன்மமும் நிறைய உண்டு..சமீபத்திய தசாவதாரம், விசுவரூபம் வரை அவை நீண்டு கொண்டேதான் இருக்கிறது .. அவ்வப்போது அதை வெளிப்படுத்தியும் இருக்கிறேன்..இருப்பேன்.

ஆனாலும் நான் உச்சி முகர்கிற சில தமிழ் படங்களில், அவரின் சில படங்களுக்கும் இடமுண்டு, என்பதை ஒரு போதும் என்னால் மறுக்கலாகாது.. அப்படிப்பட்ட தாக்கத்தை தரக்கூடிய படமாக உத்தமவில்லன் இல்லாவிட்டாலும், கமலஹாசனை திரைப்போர்த்தி எக்காளமிட்டு கேலி செய்துக்கொண்டிருக்கும் என்போன்ற சிலரை உத்தமவில்லன் சற்று தடுமாற செய்திருக்கிறது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன். சமீபத்தில் ஹேராம் தவிர்த்து அவரது எந்தபடமும் செய்யாத இந்த அதிர்வுக்கோட்டில் எதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கத்தான் செய்கிறது  உத்தமவில்லன்.

உத்தமவில்லனைப் பொறுத்த மட்டில் கமல் தாண்டி எதுவும் பேசலாகாது.. அப்படி பேசுதல் அறமும் ஆகாது.. அப்படி பேசுவது தேவையுமற்றது…எனவே முழுக்க முழுக்க அவரைப்பற்றி மட்டுமே பேசியாக வேண்டியதாய் இருக்கிறது.. அதுவே நியாயமானாதாகவும் இருக்கிறது.

முதல் மெச்சல்.. தமிழ் சினிமாவின் ஒருத்திக்கு ஒருவன் நாயக பிம்பத்தை கட்டுடைத்தற்காக.. முன்னமே அனேகர் இதைசெய்திருந்தாலும், ஏன்  கமலே அதை இந்திரன் சந்திரன் படத்திலேயே செய்திருந்தாலும், ஒரு சில சமரசம் வேண்டி வேறோரு நல்ல நாயகனோ, அல்லது நாயகன் செயல்களுக்கு எதாவதொரு கற்பிதமோ கற்பிக்கப்பட்டுதான் இதுவரை அனேக சினிமாக்கள் வந்துள்ளது. ( பருத்திவீரன் விதிவிலக்கு ) அல்லது  இன்னொரு நாயகனுக்கு நல்லவன் எனும் முகமூடியை மாட்டிவிட்டுத்தான் வந்திருக்கிறது.. அதுவே உத்தமவில்லனில் மனோரஞ்சன் என்கிற கேரக்டர் கள்ள உறவு வைத்திருப்பது தொட்டு, சூழ்நிலைகளின் போக்கில இசையும்,  சராசரி மனிதன் என்பதாலும், அவனே  இந்தபடத்தின் நாயகன் என்பதாலும் இது ஆகச்சிறந்த கட்டுடைத்தலாகிறது.

இரண்டாவது மெச்சல்.. நான்லீனியர் யுக்தியில் சாவின் நுனியிலுள்ள ஒரு நாயகனை சுற்றிய நிஜ கதையையும், சாவை வென்ற ஒரு நாயகனைச் சுற்றிய ஒரு கற்பனை கதையையும் கோர்த்து இரண்டையும் ஒரு புள்ளியில் இணைக்கும் ஒரு முழு நீள கதை சொல்லலுக்காக..ஆங்காங்கே கொஞ்சம் சோம்பல் தொற்றும் கதையானாலும் இறுதியில் முழுக்க முழுக்க நெகிழ வைக்கும் கதையைத்தான் சொல்லியிருக்கிறார் என்பதில் ஐயமேதுமில்லை.

மூன்றாவது மெச்சல்.. உலகமே கமலஹாசன் அவர்களின் நடிப்புத்திறனை அறியும். அவரே தன்னந்தனியாக போட்டி போட்டுக்கொண்டு அவரின் முந்தைய உச்சங்களை அடித்து நொறுக்கும் மாண்பு அவரின் அடுத்தடுத்த படங்களில் வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது என்றாலும், சமீபத்திய சில படங்களில் அதீத மேக்கப் எனும் உச்ச ஒப்பனைகளுக்குப்பின்னால். அவரின் நடிப்புத்திறன் ஒளிந்தும்/ஒழிந்தும் வந்திருக்கிறது.. அந்த நிகழ்வுகள் உத்தமவில்லனிலும் தைய்யம்  கலையினூடே  தொடர்ந்தாலும் நிச்சயம் இதில் வேறு படுகிறது என்றே சொல்வேன்.

திடீரென தான் அறியவந்த தன் மகளின் ஒவ்வொரு போட்டோக்களை.. சிறுத்து விரிந்த கண்களையும், நெகிழ்ந்து மகிழ்ந்த முகத்தினையும் கொண்டு ஒவ்வொன்றாக நோக்கும் போதும்.

தன்நோய் குறித்து அறிந்து கொண்ட மகனின் உணர்ச்சிகளினூடே தன்னை புதைத்துக்கொள்ள அதைச்சில ரசிகர்கள் எட்டிப்பார்த்து கைதட்டி ஆர்ப்பரிக்க.. போங்கய்யா ப்ளீஸ் இது என் பிரைவசி என அழுதுகொண்டே அதட்டிக் கெஞ்சும் போதும்.

அறுவைசிகிச்சையின் முன்பு.. மெதுவாக மயங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் தனக்கு மாட்டப்பட்ட மாஸ்க்கினுள்ளே உதடு குவித்து காதலியிடம் முத்தம் ஒன்றினை கடத்திக் கண்ணடிக்கும் போதும். 

மேல்வந்த காட்சிகளில் அவரின் நடிப்பைப் பார்த்து சிலிர்த்த போது தோன்றியது/ஊர்ஜிதமானது ஒன்றுதான்.. ஒப்பனைக்களுக்கு அப்பாற்பட்ட உன்னத நடிகன்/கலைஞன் திரு.கமலஹாசன்.

நான்காவது மெச்சல்.. படத்தில் இரண்டுகடிதங்கள் வாசிக்கப்படுகிறது.. ஒன்று ஒரு உச்ச நடிகனை சூழ்நிலையால்  பிரிந்து செல்லும் அவனது காதலியால் எழுதப்பட்டது.. கடிதம் அவன் மீது பரவிய வெளிச்ச சிக்கல்களினால் சிக்குண்ட அவளது காதலைப்பேசுகிறது
அக் கடிதம் வாசிக்கப்படுகிறபோது திரைக்கு முன்னால் ப்ரொஜெக்டரின் வெளிச்சத்தினூடே நிற்கிற அந்த நடிகனின் முகத்தைக் குறியீடாக அந்தக்காட்சி காட்டுகிறது.

இரண்டாவது கடிதம் வாசிக்கப்படுகிறது.. தன்காதலிக்கு தன்மீது பரவிய அந்த வெளிச்ச சிக்கல்களை விட தன் காதலே பெருசென அந்த கலைஞனின் கடிதம் பேசுகிறது.. அப்போது அந்தகலைஞன் தனது ஒப்பனையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து தன் உண்மை முகத்தைக் காட்டுகிற காட்சி குறியீடாக வருகிறது..இப்படி காட்சிகளின் தீவிரத்தை, தமிழ் சினிமாவில் திரை மொழியினூடே கமல் தவிர வேறு யாராலும் நிறுவப்பட முடியாது, என்பதை இங்கே மெச்சித்தான் ஆகவேண்டும்.

இப்படி மெச்சில்களைப் பட்டியலிட்டு பட்டியலிட்டு ஆயிரமாயிரம் உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் என்றாலும், ஒரு முழு சினிமாவாக காணும் போது அவரின் பல சினிமாக்களின் நீட்சியாக ஆங்காங்கே   நாடகபாணியில் காட்சிகள் வருவது, எல்லா படத்திலும் ஒரு கும்பல் கமலை நேசிப்பது என தொடரும் க்ளிஷே காட்சிகள் நெருடலாக இருக்கிறது.. சுவாரஸ்யமற்ற கற்பனை கதைவேறு ரசிகனை பொறுமையின் எல்லைவரை அழைத்துச்சென்று சோதிக்கிறது.. மேலும் மேலும் நொட்டையும் நொள்ளையும் சொல்ல சில விசயங்கள் இந்தப்படத்தில் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் கிளைமாக்ஸ் முடிந்து மொத்தமாக உத்தமவில்லன் எனும் அவுட்புட்டை தரிசித்து வெளிவருகையில் முகத்தில் கமல்டா எனும் பெருமை எழவே செய்கிறது. அதுவே கமலின் வெற்றி..ஆகவே உத்தமவில்லன் உன்னத கலைஞனின் சினிமாதான். ஆனாலும் இதுதான்  உன்னத படைப்பு என்றில்லை.

தோழமையுடன்
கர்ணாசக்தி

1 comment:

  1. கொட்டுக்களும் ஷொட்டுக்களும் கலந்த ஆக்கமான விமர்சனம்.
    படித்தேன் இரசித்தேன்.
    - சங்கு

    ReplyDelete